2005-02-24

சிறுநண்டு மணல் மீது படம் ஒன்று கீறும்

- மகாகவி (து.உருத்திரமூர்த்தி) -

சிறுநண்டு மணல் மீது படம் ஒன்று கீறும்
சில வேளை அதை வந்து கடல் கொண்டு போகும்
கறி சோறு பொதியோடு தருகின்ற போதும்
கடல் மீது இவள் கொண்ட பயம் ஒன்று காணும்

ஏலே ஏலே தத்தெய்தாம் ஏலே ஏலே
ஏலே ஏலே தத்தெய்தாம் ஏலே ஏலே


வெறு வான வெளி மீது மழை வந்து சேரும்
வெறி கொண்ட புயல் நின்று கரகங்கள் ஆடும்
எறிகின்ற கடல் என்று மனிதர்கள் அஞ்சார்
எதுவந்ததெனினென்ன அதை வென்று செல்வார்

ஏலே ஏலே தத்தெய்தாம் ஏலே ஏலே
ஏலே ஏலே தத்தெய்தாம் ஏலே ஏலே

போகாத வழி மீதில் ஆர் போயினார்கள்
பொல்லாத பழி ஏதும் ஆர் எண்ணினார்கள்
ஆகாதசெயல் ஒன்றை ஆரே புரிந்தோம்
அலை மீதில் உவர் நீரை உழவே அலைந்தோம்

ஏலே ஏலே தத்தெய்தாம் ஏலே ஏலே
ஏலே ஏலே தத்தெய்தாம் ஏலே ஏலே


இருளோடு வெளியேறி வலை வீசினாலும்
இயலாது தரவென்று கடல் கூறலாகும்
ஒருவேளை முகில் கீறி ஒளி வந்து வீசும்
ஒருவேளை துயர்நீள உயிர் வெந்து சாகும்

ஏலே ஏலே தத்தெய்தாம் ஏலே ஏலே
ஏலே ஏலே தத்தெய்தாம் ஏலே ஏலே


சிறுநண்டு மணல் மீது படம் ஒன்று கீறும்
சில வேளை அதை வந்து கடல் கொண்டு போகும்
கறி சோறு பொதியோடு தருகின்ற போதும்
கடல் மீது இவள் கொண்ட பயம் ஒன்று காணும்

2 Kommentare:

Chandravathanaa hat gesagt…

இப் பாடலில் ஏதாவது வரிகள் சேர்க்கப் படாமல் இருந்தாலோ அன்றி வேறேதும் பிழைகள் இருந்தாலோ தெரிந்தவர்கள் சுட்டிக் காட்டுங்கள். நன்றி

மு.மயூரன் hat gesagt…

ஏலேயேலோ....... தந்தையாம்
ஏலேயேலோ.......
ஏலேயேலோ....... தந்தையாம்
ஏலேயேலோ.......

சிறுநண்டு மணல் மீது
படம் ஒன்று கீறும்
சிலவேளை இதை வந்து
கடல் கொண்டு போகும்.

கறிசோறு பொதியோடு
தருகின்ற போதும்
கடல் மீதில் இவள் கொண்ட
பயம் ஒன்று காணும்.

வெறுவான வெளி மீது
மழை வந்து சீறும்
வெறி கொண்ட புயல் நின்று
கரகங்கள் ஆடும்.

நெறி மாறுபட நூறு
சுழி வந்து சூழும்
நிலையான தரை நீரில்
இலை போல் ஈடாடும்.

இருளோடு வெளியேறி
வலை வீசினாலும்
இயலாது தர வென்று
கடல் கூறல் ஆகும்.

ஒரு வேளை முகில் கீறி
ஒளி வந்து வீழும்
ஒரு வேளை துயர் நீள
உயிர் வெந்து சாகும்.